திமுக தலைவர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் கொடுக்க முதலில் மறுத்தது ஏன் என்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு உட்பட்ட வாரணாசியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் வி.என். ஜானகி இறந்தபோதும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் இறந்த போதும், அவர்களது உடல்களை சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி கோரப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
எனினும், முன்னாள் முதலமைச்சர்களின் உடல்களை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் அளிக்க முடியாது என அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தெரிவித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அந்த அடிப்படையில்தான் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி மறைந்தபோது, அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்க வழிவகை இல்லை என்று தான் தெரிவித்ததாக முதலமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு எதிரே உள்ள 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை கொடுத்ததாகவும், ஆனால் அதை ஏற்க மறுத்து ஸ்டாலின் நீதிமன்றம் சென்றதாகவும், நீதிமன்றத்தின் ஆணைப்படி மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். உண்மை இவ்வாறு இருக்க, தமது தந்தைக்கு ஆறடி நிலம் கூட கொடுக்க அதிமுக அரசு முன்வரவில்லை என செல்லும் இடங்களில் எல்லாம் மு.க. ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை கூறி பிரச்சாரம் செய்து வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.







