தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ? எப்படி ஒழிக்கப் போகிறார் ? – டிடிவி தினகரன்!

வரும் காலங்களில் ஊழல் ஒழிப்பை பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி அவர்கள், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

ஏற்கனவே ஊழல் புகார்களுக்கு உள்ளாகி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி, தவெகவில் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட வீராசாமி அவர்கள், தற்போது ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், அவர் மீது ஏற்கனவே குவிந்திருக்கும் ஊழல் புகார்களையும், பொதுமக்கள் அவர் மீதி வைத்த குற்றச்சாட்டுகளையும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது தவெக நிர்வாகி ஒருவர் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், தவெகவின் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றின் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

எனவே, ஒப்பந்ததாரரிடம் தவெக நிர்வாகி லஞ்சம் வாங்குவது போல சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் வீடியோக் காட்சிகளை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி, லஞ்சம் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் ஊழல் ஒழிப்பை பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.