சீன உளவு கப்பலில் என்ன இருக்கிறது ?

இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டா என்ற துறைமுகத்தில் சீன உளவு கப்பல் முகாமிட்டுள்ளது. இந்த உளவுகப்பலை இலங்கை துறைமுகத்தில் அனுமதிக்க கூடாது என இந்தியா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.  யுவான் வாங்-5 என்ற…

இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டா என்ற துறைமுகத்தில் சீன உளவு கப்பல் முகாமிட்டுள்ளது. இந்த உளவுகப்பலை இலங்கை துறைமுகத்தில் அனுமதிக்க கூடாது என இந்தியா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.  யுவான் வாங்-5 என்ற உளவு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிற்க இந்தியா ஏன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதில் அப்படி என்ன தொழிற்நுட்பம் இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சீனா கடந்த 1980ம் ஆண்டு யுவான் வாங் என்ற உளவுபார்க்கும் கப்பலை உருவாக்கியது. அது முதல் தலைமுறை கப்பல் என அழைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து 1986ஆம் ஆண்டு இரண்டாவது தலைமுறை உளவு கப்பலை உருவாக்கியது. தற்போது மூன்றாவது தலைமுறை உளவு கப்பலான யுவான் வாங் 5 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்தான் தற்போது இலங்கை துறைமுகத்தில் முகாமிட்டுள்ளது. இந்த கப்பல் ஒரு மணி நேரத்திற்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த கப்பலானது 222 மீட்டர் நீளமும், 25 புள்ளி 2 மீட்டர் அகலமும் உடையது.

ஏன் எதிர்க்கிறது இந்தியா?

இந்த யுவான் வாங் உளவு கப்பல் செயற்கைகோளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை துறைமுகத்தில் இருந்து 750 கிலோ மீட்டர் வரை உளவு பார்க்கமுடியும். அந்த வகையில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா வரை உள்ள நிலபரப்புகளை முழுமையாக உளவு பார்க்க முடியும். இந்த உளவு கப்பல் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் போன்றவற்றை முழுமையாக உளவு பார்க்க முடியும். இதனால் நம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

இந்த உளவு கப்பலை கடந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி முதல் தன் வசம் வைத்துள்ளது சீனா. இதேபோன்று 7 உளவு கப்பல்கள் சீனாவிடம் உள்ளன. இதேபோன்று உளவு கப்பல் நம் நாட்டில் உள்ளது.

இந்த உளவு கப்பலில் இருந்து எதிரி நாட்டின் முக்கிய இடங்களை உயரிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகளை கொண்டு குறி வைத்து தாக்க முடியும்.

சீனாவானது இந்த யுவான் வாங் உளவு கப்பல் மூலம் எதிரி நாடுகளின் ராணுவ தளவாடங்களை குறித்த தகவல்களை சேகரிக்கவும், அந்த இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவான பாதை எவை போன்ற சர்வேக்களை எடுக்க பயன்படுத்தி வருகிறது.

இலங்கை அரசு அனுமதி

இந்த கப்பலானது தற்போது இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இது, அடுத்த ஒரு வாரத்திற்கு அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்து முதலில் இலங்கை அக்கப்பலில் இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி மறுத்தது. பின்னர் சீனாவின் கடும் அழுத்தத்தை தொடர்ந்து இலங்கை துறைமுகத்தில் உளவு கப்பலை நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.