வாரிசு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தெலுங்கில் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக வாரிசு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது மேலும் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்தது. அதேபோல், வாரிசு படத்தின் ட்ரெய்லரும் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி வெளியாகி மில்லியன் கணக்கான பார்வைகளைக் குவித்து, யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 11ஆம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கில் வாரிசு திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தெலுங்கில் வாரிசு படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என இன்று படத்தின் தயாரிப்பாலர் தில் ராஜு அறிவித்துள்ளார். இதனால் நடிகர் விஜய்யின் தெலுங்கு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மேலும் பொங்கல் பண்டிகையன்று வாரிசு திரைப்படத்தை வெளியிடவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவின் திரைப்படங்களும் வெளியாகவுள்ளது. இதனால் வாரிசு படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என சினிமா வட்டரங்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் தெலுங்கில் வாரிசு திரைப்படத்தை ஜனவரி 14 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.








