இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பியதை அடுத்து மொத்த நாடுகளும் சுத்தமாக முடங்கின. உலகமே லாக்டவுனில் பூட்டிக் கிடந்ததெல்லாம், கொரோனா செய்த மாயம். ஏராளனமான உயிர்பலி, பொருளாதார நஷ்டம், வாழ்வாதாரம் பாதிப்பு என மக்கள்பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை நெருங்கும் நிலையில், மக்கள் இப்போதுதான் மீண்டு வருகின்றனர். இந்நிலையில், உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் வைரஸ், கடந்த மாதம் 24-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறிப்பட்டது. இதையடுத்தும் பல்வேறு நாடுகளுக்கும் இந்த வகை தொற்றுப் பரவிய நிலையில், இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஏழு பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ஒன்பது பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும், டெல்லியிலும் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.








