நெல்லை மாவட்டத்தில் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு முதல் கட்டமாக ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இதே போன்று நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் தொடர் மழை வெள்ளத்தால் ஆற்றாங்கரை தெரு, மூங்கிலடி, கீழப்பத்தை, மேலப்பத்தை, கலுங்கடி, பத்மநேரி, புலியூர்குறிச்சி, மாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தது. இதுமட்டுமல்லாது பல கிராமங்கள் தனித்தீவுகளாக மாறிய நிலையில், மொத்தமாக வெள்ள நீர் சூழ்ந்து மின்சாரம், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் பல்வேறு தரப்பினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ள நீர் வடியவடிய மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு திருநெல்வேலி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்த கனமழை காரணமாக, பொதுமக்கள் அதிக இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக நெல்லை, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 12 கிராமங்கள் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு முதல் கட்டமாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.







