தமிழக முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் நடந்துவந்து குடும்பத்தினருடன் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மற்றும் முதல்வர் பழனிசாமி தயார் தவசாயி ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் சிலுவம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் தன்னுடைய மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் 500 மீட்டர் நடந்தே வந்து வாக்கினைச் செலுத்தினார். முதல்வர் பழனிசாமியுடன் அவருடைய பேரக்குழந்தை உடன்வந்திருந்தார்.
சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி இத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் த.சம்பத்குமார், அமமுக சார்பில் பூக்கடை சேகர், மநீம சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் சார்பில் ஸ்ரீ ரத்னா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.







