முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்க என்னைச் சந்திக்கவும் வாழ்த்துகளையும் தெரிவிக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைளுக்கு பதில் புத்தகங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்று நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சுறுத்தி வரும் இந்த சூழ்நிலையில் தமிழக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தத மருத்தவக் கட்டமைப்புகள், முழு ஊரடங்கு காரணமாக தொற்று பரவாமல் தடுக்க அரசு களப்பணி ஆற்றிவருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தடுப்புப் பணிகளுக்கான கூடுதல் செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள கருணை உள்ளத்துடன் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் பலரும் நிதி உதவியை வழங்கி வருகிறார்கள்.
இதன் பொருட்டு என்னைச் சந்திக்கவும், வாழ்த்துகளை தெரிவிக்கவும் வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகள் ஆகியவற்றை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பொதுவாக இவற்றை தவிர்த்து புத்தகங்கள் வழங்குகள் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருபவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே பூங்கொத்து, பொன்னாடைகளை உறுதியாக தவிர்க்கக் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல் மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக செல்லும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு வரவேற்பு வளைவுகள், பதாகைகள் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
இக்கட்டுப்பாடுகளை மீறுபவர்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களே கண்டிக்கவேண்டும்.
கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் அதிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தவேண்டும்.
நாம் நமது செயல்களின் மூலமாக மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடிப்போம்.நின்று நிலைபெறும் சாதனைகளின் மூலமாக மக்களின் அன்பைப் பெறுவோம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.