சென்னை திருவொற்றியூரில் உள்ள பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில், புரட்டாசி மாத நவராத்திரி திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. நின்ற கோலத்தில் இருக்கும் வடிவுடையம்மனை பல ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் தரிசிக்க வருவது வழக்கம். இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து, உற்சவ சிலைக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, தபசு அலங்காரத்தில் பல்லக்கில் அமரவைத்து கலசம் வைத்து பரிகார பூஜைகள், யாக பூஜைகள் செய்து கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தூய தீப ஆராதனைகள் செய்து பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் சங்கநாதம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி வடிவுடைய நாயகி என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தபசு அலங்காரத்தில் வீற்றிருக்கும் அம்மனை கோயில் நான்கு மாத வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விநாயகர் முன்செல்ல அம்மன் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களை பல்லக்கில் தூக்கி ஊர்வலமாக மேளதாளம் முழங்க கொண்டு சென்றனர்.
ரூபி.காமராஜ்







