பல்லடம் அருகே 6 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த காற்றாலை மீது, இடி முழுமையாக இறங்கி தீப் பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இந்நிலையில் கேத்தனூரில் இருந்து மானாசிபாளையம் செல்லும் சாலையில் ஏராளமான காற்றாலைகள் உள்ளன. அதில் 6 வருடங்களாக இயங்காமல் இருந்த காற்றாலை மீது திடீரென அதிகாலை இடி தாக்கியது. இதில் காற்றாலை முழுமையாக தீ பற்றி எரிய தொடங்கியது. இந்த காற்றாலை அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆவதாகவும் கடந்த 6 வருடங்களாக காற்றாலை இயங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
பின்னர் தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அருகில் வீடுகள், கால்நடைகள் எதுவும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஹை டெக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்த காற்றாலை இயங்காமல் இருந்த நிலையில், இந்த காற்றாலையை அப்புறப்படுத்தாமல் இருந்ததே விபத்துக்கு காரணம் எனவும், இதுபோன்று ஏராளமான காற்றாலைகள் இப்பகுதியில் இயங்காமல் உள்ளதாகவும், விபத்துக்களை தவிர்க்க உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூபி.காமராஜ்







