சிவகாசி அருகே உணவு விடுதி ஒன்றில் முகம் தெரியாத நபர்கள் சமைத்து சாப்பிட்டது மட்டுமின்றி, கல்லாவில் இருந்த 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 50). இவர் அதே பகுதியில் பலசரக்கு கடையும், ஹோட்டலும் அருகருகே நடத்தி வருகிறார். இவர் கடையில் வசூல் ஆன ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை பலசரக்கு கடையின் கல்லாப் பெட்டியில் வைத்துவிட்டு வழக்கம் போல் சென்று விட்டார்.
பின்னர் மறுநாள் காலையில் கடையை திறக்க வந்த போது, கடையின் பின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து சிவகாசி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த 2 கடைகளிலும் மொத்தம் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் 3 பேர் லுங்கியை தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஹோட்டலில் நுழைந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த மாவில் சப்பாத்தி போட்டு 3 பேரும் சேர்ந்து சாப்பிட்டனர். கடையில் இருந்த சிகரெட், குளிர்பானம் உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்து சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து அவர்கள் கடை கல்லாப்பெட்டியை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தையும், கடையில் இருந்த சில பொருட்களையும் திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான 3 நபர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து சிவகாசி நகர குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








