வீட்டில் திருடிவிட்டு ,’அவசரத்துக்காக திருடுகிறேன், மன்னித்துவிடுங்கள்’என்று கடிதம் எழுதிய திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் மலப்புரம் அருகில் உள்ள எடப்பால் பகுதியை சேர்ந்தவர் ஷம்சீர். இவர் அவசரத் தேவைக்காக, நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தை வீட்டில் வைத்திருந் தார். பணம் இருப்பதை அறிந்திருந்த ஒரு திருடன், வீட்டில் யாருமில்லாத நேரத்தில், பணம் இருந்த அறைக்குள் நுழைந்தான். உள்ளே இருந்த பணம், ரூ.67 ஆயிரத்தை எடுத்துக் கொண்ட அந்த, ’திருடர் குலத் திலகத்’துக்கு மனசு கேட்கவில்லை.
இதனால், கடிதம் எழுதினான். அதில், ’ஷம்சீர், என்னை மன்னிச்சுக்கோங்க. உங்க வீட்டுல இருந்து பணத்தை எடுத்திருக்கேன். எனக்கு இப்போ உடம்பு சரியில்ல. நடக்கக் கூட முடியலைன்னா பாருங்களேன். என்னை உங்களுக்குத் தெரியும். நான் யாருன்னு இப்போ குறிப்பிட விரும்பலை. நான் வீட்டுக்குத் திருட வரும்போது ஷாம்னா குளிச்சுட்டு இருந்தாங்க. உங்க அம்மா உள்ள இருந்தாங்க. இந்த லெட்டரை இங்க வச்சிருக்கேன். சீக்கிரமா பணத்தை திரும்பி தந்திடறேன். ஆனா, அதுக்கு கொஞ்சம் அவகாசம் வேணும். எங்க வீட்டுலயும் இது யாருக்கும் தெரியாது. ரொம்ப அவசரத் தேவைக்காக எடுத்திருக்கேன். தயவு செஞ்சு என்னை மன்னிச்சுக்கோங்க’ என்று கூறியுள்ளார்.
இப்படி கடிதம் எழுதப்பட்டதை அடுத்து ஷம்சீருக்கு தெரிந்தவர்கள்தான் பணத்தை திருடியிருப்பார்கள் என்பதால், சங்கரம்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








