தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2023-24-ம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். பேரவைக் கூட்டம் 5 நாட்கள் நடைபெறலாம் என்று சொல்லப்படும் நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.
மேலும் இந்த கூட்டத்தொடரில் முக்கியமாக, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.