5-வது நாளாக தொடரும் சோதனை… ஜெகத்ரட்சகன் மருமகன்களிடம் டெல்லி வருமானவரித்துறை ஆணையர் விசாரணை!

ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை கொண்டு ஜெகத்ரட்சகன் வீட்டில் டெல்லி வருமானவரித்துறை ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு…

ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை கொண்டு ஜெகத்ரட்சகன் வீட்டில் டெல்லி வருமானவரித்துறை ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.

இந்தச் சூழலில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஒருசில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், ஐந்தாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், forensic audit எனப்படும் தொழில்நுட்ப தடயவியல் ஆய்வை வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறினாரா பவா செல்லதுரை?… காரணம் என்ன?

இந்நிலையில், டெல்லியில் இருந்து வருமான வரித்துறை ஆணையர் சுனில் குப்தா சென்னை வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளார். ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் இளமாறன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை கொண்டு அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.