ஜார்கண்டில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு!

ஜார்கண்ட்டில் பெய்த பலத்த மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜார்கண்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஜார்கண்டில் கடந்த 24 மணி நேர்தத்தில் 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ராஞ்சி மற்றும் கார்வா மாவட்டங்களில் தலா 2 பேர், சத்ரா, கிரிதி, செராய்கேளா-கர்சாவன் மற்றும் ஜம்தரா மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் சிறுவர்கள் ஆவர். இதுதவிர 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவர்களில் ரீனா தேவி என்ற பெண் மரத்திற்கு அடியில் நின்றபோதும், ராம் அவதார் பால் என்பவர் ஆடு மேய்க்கும்போதும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். வடஇந்திய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, இடி மின்னல் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.