குற்றாலம் பகுதிகளில் டிப் டாப்பாக காரில் சுற்றுலா பயணிகளை போல் உலா வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள ராமாலயம் என்ற பகுதியில் மேற்கு வங்கம் பகுதியை சேர்ந்த பிரந்தர் சக்கரவர்த்தி என்கின்ற சாப்ட்வேர் இன்ஜினியர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக புகார் வந்தது. இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கொள்ளை சம்பவத்தில் 115 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவான நபர்கள் குறித்து விசாரணை நடத்திய போது, கொள்ளை அடிக்க வந்த நபர் டிப்டாப்பாக முகக் கவசம் அணிந்தபடி ஒரு காரில் வந்து இறங்கி கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து, அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்தக் கார் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த வேல்முருகன்(37) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. எனவே கன்னியாகுமரி விரைந்த குற்றாலம் போலீசார் வேல்முருகனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, குற்றாலம் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் வேல்முருகன் ஈடுபட்டதும், அவருடன் புதுக்குடி பகுதியை சேர்ந்த டேனியல் பிரகாஷ் (வயது 38) மற்றும் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 35) ஆகிய இருவரும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மூவர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மூவரும் சிறையில் வைத்து நண்பர்களாக பழகி பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் போல் நோட்டமிட்டு தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 78 கிராம் தங்க நகைகளை மற்றும் காரை பறிமுதல் செய்து, அவர்கள் மூவரையும் செங்கோட்டை நீதித்துறை நடுவர் சுனில் ராஜா முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும், டிப் டாப்பாக குற்றாலம் பகுதிக்கு சுற்றுலா வந்தது போல் உலா வந்து, குற்றாலம் பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, யாரும் இல்லாத வீடுகளில் டிப்டாப் ஆசாமிகள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் குற்றாலம் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.