”உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” – உயிரிழந்த ஜெயாராஜின் குடும்பத்தினர் பேட்டி……!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று உயிரிழந்த ஜெயாராஜின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சாத்தான் குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கில் நடந்திருப்பது கொலை என்று உறுதி செய்து, குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் 9 பேருக்குமான தண்டனை விபரங்கள் மார்ச் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குற்றவாளிகள் 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று உயிரிழந்த ஜெயாராஜின் மகள் பெர்ஸிஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் உயிஜெயராஜின் மகள் பெர்ஸிஸ் கூறியதாவது ;

காவல்துறை தாக்கியதால் தான் தந்தை மற்றும் சகோதரர் மரணம் ஏற்பட்டது. எங்களுக்கான நீதி கிடைத்துள்ளது என நினைக்கிறேன். தண்டனை விபரங்கள் வந்தால் தான் முழுவதுமாக கூற முடியும். மார்ச் 30 ஆம் தேதி தண்டனை விபரங்களுக்காக காத்திருக்கிறோம்

தந்தை மற்றும் சகோதரருடைய அன்பு இல்லாமல் தவிக்கிறோம். எனது சகோதரன் வாழ்க்கை தொடங்கும் முன்பே அடித்து கொன்று விட்டார்கள். நாங்கள் உயிரோடு உள்ளவரை இதை மறக்க முடியாது. அது எங்களுக்கு இழப்புதான். தந்தை மற்றும் சகோதரன் ஆகிய இருவர் முன்பாகவே காவல்துறையினர் அவர்களை அடித்து தாக்கியுள்ளனர். அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும். தந்தை மற்றும் சகோதரரை தாக்கிய 9 பேரும் மனிதர்களே கிடையாது. மிருகமாகத்தான் அவர்கள் செயல்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.