“தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து, தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில், பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும் போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம்.

“தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்” என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுகவின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி!

நமது கூட்டணி ஒப்பந்தக் கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிக்கும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரி வேந்தருக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும். களம் நமதே! வெற்றியும் நமதே”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.