உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றியை ருசித்தது.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், புனேயில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. வங்கதேச அணி ‘ரெகுலர்’ கேப்டன் சாகிப் அல் ஹசன் காயம் (தொடைப்பகுதி) காரணமாக விலகினார். சான்டோ அணியை வழிநடத்தினார். ‘டாஸ்’ வென்ற இவர் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
வங்கதேச அணிக்கு தன்ஜித், லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. தன்ஜித் (51) அரை சதம் அடித்தார். ஜடேஜா ‘சுழலில்’ கேப்டன் சான்டோ (8) சிக்கினார். லிட்டன் அரை சதம் கடந்தார்.
சிராஜ் ‘வேகத்தில்’ மெஹிதி (3) அவுட்டானார். ஜடேஜா பந்துவீச்சில் லிட்டன் (66) ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் 38 ரன் எடுத்தார். மகமதுல்லா (46) கைகொடுக்க, வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 256 ரன் எடுத்தது. முஸ்டபிஜுர் (1), ஷோரிபுல் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
257 ரன் வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 41.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 261 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் விராத் கோலி ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்தார்.
கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 34 ரன் எடுத்தார். கில் (53) ரோகித் சர்மா(48) ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு பலமாக இருந்தனர். இந்த வெற்றி இந்திய அணிக்கு 4 வது வெற்றியாக அமைந்தது.







