கொரோனா தொற்று அதிகம் பாதித்தாலும் அதைச் சந்திக்கும் அளவிற்கு அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று துவங்கி வைத்தார். இதில் ஆட்சியர் மதுகுசூதன் ரெட்டி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் யசோதாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஒருவேளை அதன் எண்ணிக்கை கூடினாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது என்றும் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை கனிசமாக கூடி 1 லட்சத்தை எட்டியுள்ளது என்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் மற்றவர்களின் உயிர்களை காக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள் என்றும் பொதுமக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.







