தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த போகின்றனர் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை மானியக்கோரிக்கை மீதான விவாத நிழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில், எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் இருந்து திமுக நழுவி கொண்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக நிதியமைச்சர் பேசியது குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என திமுக தெரிவித்திருந்ததாகவும், ஆனால் தற்போது, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நழுவி கொண்டுள்ளதாகவும் கூறினார்.
பின்னர் மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக நடைமுறைப்படுத்துமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப்போகிறது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.








