அதிமுக ஆட்சியில் உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் எனவும், தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கொச்சைப்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழி நடுங்கிலும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர முழுஉருவ வெண்கல சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து, 96 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பழைய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளில் பேருந்து நின்று செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து சேலம் கருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், ஆயிரத்து 367 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், 235 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி தான் மறைந்த முதல்வர் கருணாநிதி. அப்படிப்பட்ட கருணாநிதியை முழு வசனகர்த்தாவாக மாற்றிய ஊர் என்றால் அது சேலம் தான். அவரது நூற்றாண்டின் முதல் சிலையை சேலத்தில் நிறுவியது பொருத்தமான ஒன்று. திமுக அரசு சேலம் மாவட்டத்திற்கு எண்ணிலடங்கா திட்டங்களை செய்துள்ளது. சேலம் மாவட்டத்திற்கு இன்னும் அதிக திட்டங்கள் வர உள்ளன. சொன்னதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்ற அப்படையில் எங்களது அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மேலும், குறுவை சாகுபடிக்காக தொடர்ந்து 3-வது ஆண்டாக குறித்த நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக கூறிய முதலமைச்சர், கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால்தான் தமிழ்நாட்டில் கடும் நிதிநிலை நெருக்கடி ஏற்பட்டதாக கூறிய அவர், உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டதால்தான் மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டிய சூழல் உருவானதாக குறிப்பிட்டார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவர் 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 2 ஆண்டுகளில் செய்துள்ளோம். அதனால் தான் நம்பர் 1 தமிழ்நாடு என பெயர் வங்கியுள்ளோம். வெளிநாடு சென்றதன் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கொச்சைப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
- பி.ஜேம்ஸ் லிசா