தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நேற்றைய தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகப் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லட்சத்தீவு மற்றும் தென் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







