தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கோரிய வழக்கு – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு 4 மாறுபட்ட தீர்ப்பு!

தன் பாலின திருணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனு மீது 4 விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ளது.  இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ஐந்து நீதிபதிகளைக்…

தன் பாலின திருணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனு மீது 4 விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ளது. 

இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நான்கு நீதிபதிகள் நான்கு விதமான தீர்ப்புகளை வழங்கியதாகவும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்ததாகவும், நீதிமன்றம் சட்டத்தை உருவாக்க முடியாது, ஆனால் அதே நேரத்தில், சட்டத்தின் சரத்துகளைக் கையாள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தையோ, சட்டப்பேரவைகளையோ கட்டாயப்படுத்த முடியாது. 200 ஆண்டுகளுக்கு முன்பு மறுக்கப்பட்ட பல விஷயங்களை இன்று நாம் ஏற்றுக்கொள்கிறோம். பல ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதி, குழந்தை திருமணம் போன்ற பல விஷயங்களை இன்று மறுக்கிறோம். சிறப்புத் திருமண சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனறு கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியிலிருந்து தொடா்ச்சியாக 10 நாள்கள் விசாரித்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமைலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு, தீா்ப்பை கடந்த மே 11-ம் தேதி ஒத்திவைத்தது.

முன்னதாக வழக்கு விசாரணையின்போது, ”தன்பாலின திருமணத்துக்கு நீதிமன்றம் சட்ட அங்கீகாரம் அளிக்க முற்படும் நடவடிக்கை என்பது, தற்போதைய சூழலுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்படும் விளைவுகளை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க முடியாது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன” என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ”தன்பாலினத்தவா்களின் உண்மையான மனிதாபிமான பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்” என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.