திருச்செந்தூர் அருகே உடன்குடி பேரூராட்சியில் சாதிய வன்கொடுமையால் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளரின் உடலை வாங்க மறுத்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்த சுடலை மாடனை பேரூராட்சி தலைவரின் மாமியாரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஆயிஷா என்பவர் சாதியைச் சொல்லி இழிவாக திட்டியதால் மனம் உடைந்து கடந்த 14ம் தேதி பூச்சிக்கொல்லி அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதையும் படிக்கவும்: அரசியலில் நிரந்தரமான நண்பர்களும், எதிரிகளும் கிடையாது- அண்ணாமலை
கடந்த 5 நாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர் சுடலை மாடனை சாதியைச் சொல்லி இழிவாக பேசிய பேரூராட்சி தலைவரின் மாமியார் ஆயிஷா மற்றும் செயல் அலுவலர் பாபு மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவரின் மாமியார் ஆயிஷா மற்றும் செயல் அலுவலர் பாபு இருவரையும் கைது செய்யக்கோரியும் பேரூராட்சி தலைவர் ஹீமைரா ரமீஷ் பாத்திமா மீது நடவடிக்கை கோரியும் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் உயிரிழந்த சுடலைமாடனின் உடலை வாங்க மறுத்து கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.







