2 ஆண்டுகள் சிறை தண்டனையால், ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ”அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?” என்று பேசியதாக தெரிகிறது . அதனடிப்படையில் , பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல்காந்தி ஒட்டுமொத்த ‘மோடி’ சமூகத்தையும் இழிவுபடுத்தி விட்டதாக கூறி குஜராத் மாநிலம், சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி எனவும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்குவதாகவும் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக உடனடியாக அவருக்கு பிணை வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், உண்மையே தன்னுடைய கடவுள் என்றும், அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்ததே தன்னுடைய நடவடிகைகள் இருக்கும் எனவும் மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
मेरा धर्म सत्य और अहिंसा पर आधारित है। सत्य मेरा भगवान है, अहिंसा उसे पाने का साधन।
– महात्मा गांधी
— Rahul Gandhi (@RahulGandhi) March 23, 2023
ராகுல்காந்தியின் பதவிக்கு ஆபத்தா?
இந்நிலையில், 2 ஆண்டு சிறை தண்டனையால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிபோகுமா? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்ற முத்த வழக்கறிஞர் உபமன்யு ஹசாரிகா கூறுகையில், சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்ததால், அவர் எம்பி பதவியை உடனடியாக பறிக்க முடியாது என்றார்.
ராகுல் காந்திக்கு அடுத்து வரும் 30 நாட்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க அல்லது ரத்து செய்ய உயர் நீதிமன்றத்தை அவர் அணுகி தீர்வு பெற்றால், அவர் தொடர்ந்து எம்.பி.யாக இருக்க முடியும் எனவும் மூத்த வழக்கறிஞர் உபமன்யு ஹசாரிகா தெரிவித்துள்ளார்.








