பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சுமார் 7:00 மணியளவில் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மொத்தம் 11 சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள், தீயணைப்பு வீரர் உள்பட மொத்தம் 50 திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.







