தென்காசியை சேர்ந்த இளைஞர் மாரியப்பன் வினித்தை காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கிருத்திகா பட்டேல் குஜராத் அழைத்துச் செல்லப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, முன் ஜாமின் கோரிய பெண்ணின் குடும்பத்தினரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தை சேர்ந்த இளைஞர் மாரியப்பன் வினித் குஜராத்தை சேர்ந்த இளம்பெண் கிருத்திகா பட்டேல் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு கிருத்திகாவை கடத்தி விட்டதாக அவரது கணவர் மாரியப்பன் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து கிருத்திகாவின் தாய்,தந்தை மற்றும் அவரது உறவினர்கள் 12 பேர் மீது வழக்குப்பதிவு போலீசாரால் பதிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில் கிருத்திகா பட்டேலின் தாய், தந்தை மற்றும் அவரது இரண்டாவது கணவர் எனக் கூறப்படும் மைத்திரிக் ஆகியோர் முன் ஜாமீன் கோரிய மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி இளந்தரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கிருத்திகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருத்திகா நேரில் ஆஜரானால் மாரியப்பன் தரப்பினரால் கடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கேட்டனர். இதனால் கோபமடைந்த நீதிபதி இளந்தரையன் கிருத்திகாவின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் எங்குள்ளனர் என கேட்டார்.அதற்கு வழக்கறிஞர் தரப்பில் தமிழ்நாட்டில் தான் உள்ளதாக தெரிவித்தார்.
கிருத்திகாவின் தாய்,தந்தை உள்ளிட்டவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும்பட்சத்தில் கிருத்திகா ஆஜராவதில் என்ன பிரச்சினை? கிருத்திகாவை அழைத்து சென்று ஆணவக்கொலை செய்யவதற்காக திட்டமிட்டுள்ளீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், இது முக்கியாமன வழக்கு என்பதால் சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் அடுத்த வ்ழக்கு விசாரணையின் போது கட்டாயமாக கிருத்திகா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் ஏதேனும் தேவை ஏற்பட்டால் மனுதாரர்களை கைது செய்து விசாரிக்கவும் காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்டார்.
—வேந்தன்







