வடமாநில தொழிலாளர் பற்றி போலி வீடியோ பரப்பிய வழக்கில் பீகார் மாநில யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை, மேலும் ஒரு வழக்கில் சென்னை நீலாங்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது தொடர்பாக கடந்த சில மாதத்திற்கு முன்பு போலி வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்களை பரப்பிய நபர்களை தமிழக காவல்துறை கண்டறிந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாகவும்,
கொல்லப்பட்டதாகவும் 30 வீடியோக்கள் போலியாக பரப்பப்பட்ட விவகாரத்தில் பீகார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனிஷ் காஷ்யப் பீகார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட போலீசாரால் வழக்குபதிவு செய்திருந்ததால், பீகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை, மதுரை மாவட்ட போலீசார் கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வந்து, மதுரை சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பியது தொடர்பாக சென்னை பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் அளித்த புகாரில், யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது அடையாறு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இன்று யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை நீலாங்கரை போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். கைது செய்து அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். மேலும், தொடர்ந்து மணிஷ் காஷ்யப்பை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா