கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைப்பதில், தடுப்பூசி பெரும் உதவியாக இருப்பது, தமிழ்நாடு காவல்துறையினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தமிழ்நாடு காவல்துறையினரிடம் நடத்திய ஆய்வில், முன்களப் பணியாளர்களின் இறப்பு விகிதம் அதிகரிக்காமல் தடுப்பதில், தடுப்பூசி பெரும் உதவியாக இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் 13-ம் தேதி முதல் மே 14-ம் தேதி வரை, தமிழ்நாடு காவல்துறையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 31 பேர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 20 பேர் தடுப்பூசியே போடாதவர்கள் என்றும், 4 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் என்றும், 7 பேர் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் என்றும், ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி, இறப்புகளை தடுப்பதில் 82 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளது என்றும், இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி, இறப்புகளை தடுப்பதில் 95% செயல்திறன் கொண்டுள்ளது, எனவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளின் கையிருப்பு அளவையும், தடுப்பூசி போடும் பணிகளையும் அதிகரிப்பது மட்டுமே, கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க உதவும் என்றும், இதுவே அடுத்து வரும் கொரோனா 3-வது அலையை தடுக்க உதவும் எனவும், ICMR-ன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது







