தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் இமானுவேல் சேகரன் ஆகியோரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த பூர்வீக வீட்டிற்குள் சென்று,பூஜை அறை வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை ஆகியவற்றை பார்வையிட்டார்.
முன்னதாக முத்துராமலிங்க தேவர் நினைவாலையம் சார்பில் பிள்ளையார்பட்டி பிச்சை
குருக்கள் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், மங்கல இசை வாத்தியங்கள் மற்றும் கும்பம் மரியாதையுடன் மலர் தூவி ஆளுநருக்கு வரவேற்பு அளித்தனர்.
இதேபோல பரமக்குடி சந்தை கடை பின்புறம் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்.
இதன் பின்னர் தமிழக ஆளுநர் ரவியிடம் தேவேந்திரர் பண்பாட்டு கழகம் மற்றும்
இமானுவேல் சேகரன் குடும்பத்தார்கள் இமானுவேல் சேகரனின் பிறந்த தினத்தை அரசு
விழாவாக அறிவிக்க வேண்டும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியலில் இருந்து
வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுவை அளித்தனர்.







