மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள நக்சல் தீவிரவாத சூழலை ஆய்வு செய்து, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நக்சல் செயல்பாடுகள் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த டிசம்பர் 2025-ல் 8-ஆக இருந்த நிலையில், தற்போது 7-ஆகக் குறைந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் படி சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர், நாராயண்பூர், சுக்மா, கான்கேர் மற்றும் தந்தேவாடா ஆகிய ஐந்து மாவட்டங்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் ஆகிய மாவட்டங்கள் நக்சல்களின் பாதிப்பு உள்ள மாவட்டங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றில் பிஜப்பூர், நாராயண்பூர் மற்றும் சுக்மா ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகவும் கான்கேர் மற்றும் மேற்கு சிங்பூம் ஆகியவை கவனத்திற்குரிய மாவட்டங்களாகவும், தந்தேவாடா (சத்தீஸ்கர்) மற்றும் கந்தமால் ஆகியவை இதர பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் அகற்ற இலக்கு நிர்ணயித்துள்ளார். 2010ம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதப்பட்ட நக்சலிசமானது, 2013-ல் 126 மாவட்டங்களில் இருந்த நிலையில் தற்போது வெறும் 7 மாவட்டங்களாகச் சுருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







