தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.75 லட்சம் அபராதத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

நீலகிரி மாவட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி யானை மற்றும் வனவிலங்குகள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த 75 லட்சம் ரூபாய் அபராதத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த…

நீலகிரி மாவட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி யானை மற்றும் வனவிலங்குகள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த 75 லட்சம் ரூபாய் அபராதத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் சேரம்பாடி என்ற இடத்தில் மின்சார வேலியில் சிக்கி யானை, நான்கு காட்டுப் பன்றிகள், ஒரு கீரிப்பிள்ளை, 3 நாகப்பாம்புகள், ஒரு காகம் உள்ளிட்டவை உயிரிழந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், அதிக அளவு மின்சார திறன் கொண்ட மின் இணைப்புகளை வழங்கியதற்கு தமிழ்நாடு மின்வாரியமே பொறுப்பு எனக் கூறி 75 லட்ச ரூபாய் அபராதம் விதித்ததுடன், அதனை வனத்துறைக்கு வழங்க கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கியது.

இந்தப் பணத்தை மின்வாரியம் செலுத்தவில்லை என்றால் வனத்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரை அணுகி பெற்றுக் கொள்ளலாம் எனவும் பெறப்படும் பணத்தை கொண்டு விலங்குகள் மனிதர்கள் இடையிலான மோதலை தடுப்பதற்கான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்ததபோது, தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் தாங்கள் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்ததுடன் 75 லட்ச ரூபாய் அபராதத்தை செலுத்தவும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உத்தரவிட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.