டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் பலியான விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆங்கில புத்தாண்டு தினத்தன்று டெல்லியின் காஞ்சவாலா என்ற இடத்தில் உள்ள சுல்தான்புரி பகுதியில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 20 வயது அஞ்சலி என்ற இளம்பெண் உயிரிழந்தார். விபத்தில் சிக்கியபோது அவரது கால் காரின் சக்கரத்தில் சிக்கியது. காரை ஓட்டியவர்கள் 13 கிலோ மீட்டர் தூரம் அவரை தர தரவென இழுத்துச் சென்றுள்ளனர். இதனால் கொடூரமான முறையில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஈவண்ட் மேனேஜ்மென்ட் (Event Management) அலுவலகத்தில் பணிபுரியும் அந்த இளம்பெண் புத்தாண்டை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து விட்டு அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பினார். ஸ்கூட்டியில் தனது தோழியுடன் சென்று கொண்டிருக்கும் போது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் அவரின் உடல் காரில் சிக்கிய படி சில கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுமார் அப்பகுதியில் 4 முதல் 5 முறை அந்த கார் சுற்றி சுற்றி வந்துள்ளது. மொத்தம் 13 கி.மீ. தொலைவுக்கு அந்த பெண்ணின் உடல் இழுத்து செல்லப்பட்டு உள்ளது. இதன்பின் வேறொரு இடத்தில் அந்த இளம்பெண்ணின் உடல் நிர்வாண கோலத்தில் மீட்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் டெல்லி மட்டும் இன்றி நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் அஷுடோஷ் என்பவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 பேரும் ரோஹினி நீதிமன்றத்தில் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இவ்வழக்கில் முக்கிய நபரான அஷுடோஷ் பிணை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும்.
இவ்வழக்கில் 6 சிசிடிவி காட்சிகள் மற்றும் 20 சாட்சிகளை காவல்துறை விசாரித்துள்ளதாகவும், வழக்கில் முக்கிய நபராக அஷுடோஷை கருதுவதாகவும் அவர்தான் இந்த கோர சம்பவத்தில் முக்கிய சூழ்ச்சிதாரர் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.