மாணவர்கள் தங்களை நிகழ்கால தலைவர்கள் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டார்.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மகளிர் அணி பிரிவு, தேசிய மாணவர் படை பிரிவு சார்பாக நடைபெறும் இந்த கருத்தரங்கில் எத்திராஜ், கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, மகளிர் கிறிஸ்த்துவ கல்லூரி என 14 கல்லூரிகளைச் சேர்ந்த 400 தேசிய மாணவர் படை மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு டி.ஜி.பி.சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவிகளுக்குப் பரிசுகளும், பதக்கங்களும் வழங்கினார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய சைலேந்திர பாபு, தேசிய மாணவர் படையின் நோக்கமே தலைமை பண்பு தான். அத்தகைய மாணவர்கள் நமது கடமையைப் புரிந்து கொண்டால் தலைமைப் பண்பு தானாக வந்துவிடும் என்றார். பொதுவாக மாணவர்கள் வாழ்க்கையில் முடிவு எடுப்பதில் தெளிவு வேண்டும் என சைலேந்திர பாபு கூறினார். மேலும் மாணவர்கள் என்பவர்கள் எதிர்காலத் தலைவர்கள் அல்ல நிகழ்காலத் தலைவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் எனவும் தேசிய மாணவர் படையின் தத்துவங்களை மனதில் கொண்டு ஒவ்வொரு மாணவரும் செயல்பட்டால் வாழ்க்கையை மாற்றி முன்னேறிவிடலாம் எனக் கூறினார்.








