சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் திட்டியதால் தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் மாடத்தி. இவருக்கு இந்து பிரியா என்ற 19 வயது மகள் உள்ளார். தனது கணவர் கணேசன் 8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் தனது மகளை மாடத்தி பீடி தொழில் செய்து படிக்க வைத்துள்ளார். இந்து பிரியா புளியங்குடியிலுள்ள தனியார் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு (B.Com) பயின்று வந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த 8ம் தேதி மகளிர் தினத்தன்று இந்து பிரியாவின் உடன் பயிலும் மாணவி கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த கல்லூரி ஆசிரியர்கள் இந்து பிரியாவை கண்டித்து, பின்பு மன்னிப்பு கடிதம் எழுதித் தர வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்றிரவு தனது தாயார் மாடத்தியிடம் கல்லூரியில் நடந்தவற்றைக் குறித்து மனவேதனையுடன் கூறியுள்ளார் இந்து பிரியா. பின்பு இன்று காலையில் மாடத்தி வெளியில் சென்று விட்டு பின்பு வீட்டுக்கு வந்து பார்த்த போது மகள் இந்து பிரியா வீட்டிற்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் உயிரிழப்பு செய்வதற்கு முன்பு தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கல்லூரி ஆசிரியர்கள் முத்துமணி, வளர்மதி ஆகிய இருவரும் கல்லூரியை விட்டுப் போகவேண்டும் என்றும் தான் ஒரு தவறும் செய்யவில்லை என்றும், இனி வரும் காலங்களில் கல்லூரிக்குப் பயில வரும் மாணவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளார்.
இதனையடுத்து மாணவியின் உறவினர்கள் அக்கடிதத்தை புளியங்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியங்குடி காவல்துறையினர் மாணவி இந்து பிரியாவின் உடலைக் கைப்பற்றிப் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்கள் இன்று கல்லூரிக்கு வரவில்லை என்று கூறப்படும் நிலையில் காவல்துறையினர் கல்லூரியிலுள்ள பிற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.