காஸாவை கட்டுக்குள் கொண்டுவந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதி காஸா. இந்தப் பகுதியில் ஹமாஸ் என்ற படை தன்னாட்சி செய்து வருகிறது. இதற்கு பாலஸ்தீனம் ஆதரவு தெரிவித்துள்ளது. காஸா எல்லையைக் கைப்பற்ற இஸ்ரேல் பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (அக். 7) ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் மூன்றரை மணி நேரம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பொதுமக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். போர் அறிவிப்பை வெளியிட்டும் இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், காஸா தெற்கு எல்லையைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, தாக்குதல் நடத்தப்பட்ட எல்லைப் பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தாலும், ஹமாஸ் படையைச் சேர்ந்தவர்களில் சிலர் காஸா எல்லையில் எஞ்சியுள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் படையினரிடையே தாக்குதல்கள் நடந்து வருகிறது. தாக்குதல் நடத்திக்கொண்டு இஸ்ரேல் படை முன்னேறுகிறது. இஸ்ரேலில் தற்போது வரை 73 ராணுவ வீரர்கள் உள்பட 700 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இரு நாடுகளிலும் சுமார் 1,100 பேர் இறந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.







