பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது ;
சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதும், ஊத்தங்கரை அருகில் முதியவர் படுகொலை செய்யப்பட்டு அவரது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் திரும்பிய திசையெல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என அடுத்தடுத்து குற்றங்கள் நிகழ்வதும், அவற்றைத் தடுக்க வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்வதும் கண்டிக்கத்தக்கது.
திரிசூலம் துளசிலிங்க முதலியார் தெருவில் உள்ள ஆறுமுகம் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம், சந்தோஷ் ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளது. சுங்குவார் சத்திரத்தில் கடந்த ஆண்டு திமுக நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் தான் இந்த படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஓபகவலசை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்த கண்ணப்பன் என்ற 74 வயது முதியவரை கொலை செய்த கும்பல், அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. இந்த இரு நிகழ்வுகளிலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைது ஆகாஷ் படுகொலை செய்யப்பட்ட பதட்டம் அடங்குவதற்கு முன்பாகவே முனீஸ்வரன் என்ற தானி ஓட்டுனர் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் அதன் தலைவரான சிவக்குமார் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என எந்தத் திசையில் பார்த்தாலும் கொலைகளும், கொள்ளைகளும் தான் நடந்து கொண்டிருக்கின்றன. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டன. கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற எந்தக் கொலையில் திடீரென உணர்ச்சிவசப்பட்டு செய்யப்பட்ட கொலைகள் அல்ல. அனைத்தும் திட்டமிட்டும், மது போதையிலும் செய்யப்பட்ட கொலைகள் தான். காவல்துறையினர் விழிப்புடன் இருந்திருந்தால் இந்தக் கொலைகளைத் தடுத்திருக்க முடியும். ஆனால், செயலற்ற திமுக அரசின் கீழ் செயல்படும் காவல்துறை இந்தக் கொலைகளை தடுக்க திறனில்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அண்மைக்காலங்களில் தோட்டத்து வீடுகளில் தனியாக வாழ்ந்து வரும் பெரியவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். 2024-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்பின், 2025 மே மாதத் தொடக்கத்தில் ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராமசாமி, பாக்கியலட்சுமி ஆகியோரை கொள்ளையர்கள் கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இக்கொலை வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படாதது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. அதைத் தொடர்ந்து விளாங்காட்டு வலசு கொலை வழக்கில் தொடர்புடையதாக ஆச்சியப்பன், மாதேஸ்வரன் , ரமேஷ், ஞானசேகரன் ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறையினர், இவர்கள் தான் சேமலைக்கவுண்டன்பாளையத்தில் மூவரையும் கொலை செய்ததாகக் கூறி வழக்குகளை முடித்தனர். அப்போதே அவர்கள் தான் உண்மையான கொலையாளிகளா? என்பது குறித்து ஐயங்கள் எழுப்பப்பட்டன.
அடுத்த சில வாரங்களில் பரமத்தி அருகே தோட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த இன்னொருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையும் முன்பு நடந்த கொலைகளை ஒத்திருந்ததால், அந்தக் கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது உறுதியானது. இப்போது அதேபோன்ற படுகொலை ஊத்தங்கரை அருகில் நிகழ்ந்திருப்பதால் இந்த குற்றச்சாட்டு ஐயத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய கொலைகளால் தோட்டத்தில் வாழும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஒருபுறம் எங்கும் கொலைகள், எதிலும் கொலைகள் என தமிழ்நாடு வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறி வரும் நிலையில், இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் ஆளும் திமுக நாள்தோறும் விதவிதமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, ரோம் மாநகரம் தீப்பற்றி எரிந்த போது ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் நவீன அவதாரமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவெடுத்திக்கிறார். இப்படி ஒரு நிலை உருவாகியிருப்பது நிச்சயமாக தமிழ்நாட்டின் சாபக்கேடு தான்.
திமுக மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் கவலையாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தங்களின் கவலையை போக்கும் வகையிலான தீர்ப்பை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அளிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







