“ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

சிவகங்கையில் ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்று பயனம் மேற்கொண்டு பொது மக்கள் மத்தியில் திமுக ஆட்சி குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் சுற்று பயனம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று மாலை காரைக்குடி சட்டமன்ற தொகுதி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி ஆகிய பகுதிகளில் உரையாற்றி பின்னர் இறுதியாக சிவகங்கை அரண்மனை வாசல் வந்த அவர் அங்கிருந்த பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது “சிவகங்கை என்பது வரலாற்று சிறப்பு மிக்க மண் என்றும் அம்மா ஆட்சி காலத்தில் இந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக வேலுநாச்சியாருக்கு மணிமண்டபம், மருது சகோதரர்களுக்கு மணிமண்டபம் மற்றும் குயிலிக்கு நினைவு தூன் என எழுப்பினார். திமுகவை பொருத்தவரை இந்த
4 ஆண்டுகால ஆட்சியில் எந்த நலத்திட்டமும் செயல்படுத்தவில்லை. என்றும் குடும்ப நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்த ஆட்சியில் 4, 5 அதிகார மையங்கள் உள்ளன.

ஒரு அதிகார மையம் இருந்தாலே நாடு தாங்காது என உள்ள நிலையில் 4,5 அதிகார மையங்கள் என்றால் எப்படி தாங்கும்? என்றும் ஸ்டாலின் அதன்பின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், அதன்பிறகு இன்பநிதி ஸ்டாலின் என வாரிசு அரசியல்தான் உள்ளது என்றும் இந்த வாரிசு அரசியல் தேவையா? என கேள்வி எழுப்பியதுடன் பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்றும் அதற்கு காரணம் திறமையான ஆட்சி இல்லாததே என்றும் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியது என பேசிய அவர் இந்த ஆட்சியில் ஒரு துறையிலாவது சிறந்து விளங்கியுள்ளனாரா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த ஆட்சியில் ஒன்று மட்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அது என்னவென்றால் கமிஷன், கரப்சன், கலைக்சன் ஆகியவற்றில் முன்னனியில் உள்ளனர் என்றும் 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு நிதி விடுவிக்காதபோது அதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை சந்தித்து நாம் முறையிட்டோம். அதற்கு பதிலளித்த அமைச்சர் திமுக அரசு ஏற்கனவே வழங்கிய நிதிக்கான கணக்கையே இன்னும் சமர்பிக்கவில்லை என கூறினார்.

நாம் தான் பாதிக்கப்படுவது ஏழை எளிய விவசாய மக்கள் என கூறியதை தொடர்ந்து 2900 கோடியை விடுவித்தது மத்திய அரசு என்றும், அனைத்து மகளீருக்கும் ஆயிரம் என கூறிவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் வழங்கவில்லை நாம் அழுத்தம் கொடுத்த பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தகுதி உள்ள மகளீருக்கு மட்டும் என குறைந்த அளவு பெண்களுக்கு வழங்கினார்கள்.

ஓய்வூதியத்தை நிறுத்தியதுடன் அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய அம்மா கிளீனிக், மடிக்கணினி, குடிமராமத்து பணி என அனைத்தையும்
நிறுத்திவிட்டார்கள் என்று தெரிவித்த அவர் ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு என்றும் பை, பை ஸ்டாலின் என பேசி தனது உரையை முடித்துக் கொண்டார். உடன் முன்னாள் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.