“மாயையை அடக்கி அதனுள்ளே இருப்பவர் கிருஷ்ணர். தானே தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும், உருவம் இன்றியும், உலகே உருவாகவும் திருத்தமாக தெளிவாகத் திகழ்கின்றார்” என்பது “ஆதிசங்கர பகவத் பாதாள் கோவிந்தாஷ்டகத்தில்” கூறிய திருவாக்கு.
அன்றெருநாள், ஆயாசமாக கிருஷ்ண பரமாத்மாவும் நாரதரும் நடந்து வந்து கொண்டிருந்தபோது நாரதர் “மாயை”அல்லது “மாயவலை”என்பதன் விளக்கம் , உட்பொருள் பற்றிய விளக்கம் கேட்டார் இது பற்றிய சந்தேகம் சிறிது காலமாக அவரை ஆட்கொண்டிருந்தது. அதைக் கேட்டதும் பகவான் சிரித்துக்கொண்டே, “வா, நடந்து கொண்டே இருக்க , உனக்குப் புரியும்” என சொல்லிக் கொண்டே நடந்தார்.
வழியில் ஒரு அழகிய பூங்கா குறிக்கிட, அங்குள்ள திட்டில் அமர்ந்து “நாரதா, தாகமாயிருக்கிறது, உனது கமண்டலத்தில் சிறிது அங்குள்ள சுனையிலிருந்து நீர் எடுத்து வா” என்று கூற, நாரதரும் சுனை நோக்கிச் சென்று, நீர் அள்ளுவதற்காக தனது கமண்டலத்தை தெளிந்த நீரின் மீது வைக்க,திடுக்கிட்டு திக்குமுக்காடிப் போனார். அற்புத காட்சியொன்றை அங்கே கண்டு மெய் மறந்தார்.
நாரதர் உன்னிப்பாக கவனிக்க, தண்ணிரினுள்,அழகிய படிக்கட்டு ஒன்று கீழ் நோக்கி ஊடுறுவி சென்று கொண்டிருந்தது. ஆவல் உந்த, மெதுவாக அந்தப் படிக்கட்டுகளில் இறங்கினார். இனம்புரியாத இன்ப உணர்வொன்று அவரை ஆட்கொண்டிருந்தது. கீழே ஒரு அரண்மனையைப் போலதொரு வீடு, அதைப் பார்த்துப் பிரமித்து நின்ற போது, அங்கே அழகோவியமாக ஒரு பெண். அப்புறம் என்ன.. காதலித்து கல்யாணமும் நடந்தேறியது.
நாரதரின் உள்ளமெல்லாம் பொங்கிப் பிரவாகிக்கும் இன்ப வெள்ளமானது. காலச்சக்கரம் சுழன்றது, இப்போது,நாரதருக்கு பதினாறு குழந்தைகள். “குழலினிது, யாழினிது என்பர், தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்” என்பதற்கொப்ப, மனைவி,குழந்தைகளுடன் மனம் ஒன்றி , மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார். 
திடீரென ஒருநாள், தண்ணீரின் அசைவுகளில் ஒரு மாற்றம் தெரிந்தது.நேரம் செல்லச் செல்ல,அதன் சுழற்சி அதிகமாகி , புயல்,காற்று ஆர்ப்பரித்து திமிறியது, அடங்காத கொந்தளிப்பில் அசைந்து திரிந்து உடைத்தெரிந்தது அரண்மனையை அனைவரும் தூக்கி எறியப் பட்டனர். மனைவியும், குழந்தைகளும் உயிர் பயத்தில் மிதந்தனர். நாரதர் வேறொரு பக்கம் போராட, செய்வதறியாது அலறினார். 
திடீரென தன் தோள் மீது யாரோ பலமாக கட்டுவதை உணர்ந்து, நாரதர் அந்தச் சூழ்நிலையிலிருந்து மீளாதவராய், நிமிர்ந்து பார்க்க “நாரதா, தாகத்திற்கு நீர் கொண்டுவரச் சென்ற நீ இங்கு அமர்ந்து கொண்டு குழந்தைகளை, மனைவியைக் காப்பாற்று எனக் கத்திக் கதறிக் கொண்டு இருக்கிறாய், என்ன ஆயிற்று உனக்கு” என்று கேட்டபடி புன்னகைத்தார் நாராயணர்.
நாரதர் வெறித்து விழித்தபடி, சுற்றும் முற்றும் பார்க்க, நிசப்தமாக நின்று கொண்டிருக்கும் நீலநிறப் பொய்கை நீர், படிக்கட்டு தவிர பச்சைபசேலென்ற இலைகளுடன் மரங்கள் மட்டுமே கண்ணில் பட , நடந்த சம்பவங்கள் அவர்க்கு, சொல்லாமலேயே விளக்கியது “மாயை”யின் அர்த்தமுள்ள பொருளை.. வெட்கம் கலந்த சிரிப்புடன் பகவானை நோக்கி கை கூப்பி, தொழுது ஏறெடுத்துப் பார்த்தபடி மெல்ல எழுந்தார்.
- சுப்பிரமணியன்







