தமிழ்நாடு பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் பனை விதைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள பனைமரங்களைப் பாதுகாப்பதுடன், கூடுதலாக பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
நடப்பாண்டில் 30 மாவட்டங்களில், 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங் கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் என வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி பனை நடவு செய்யும் திட்ட துவக்கவிழா சென்னை தலைமைச்செயலகத்தில் இனறு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், ஏரிக்கரை, மற்றும் விவசாய நிலங்களில் பனை நடவு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, சபாநாயகர் அப்பாவு, ஏற்கனவே அறிவித்திருந்தபடி, ஒரு லட்சம் பனை விதைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லினிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







