தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள். அது கடினமாக இருந்தால், அதிகம் புன்னகை செய்யுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி எழுதிய
“Exam Warriors” என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை தமிநாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். அதன் முதல் பிரதியை சென்னை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு வந்த பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத்தை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இங்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இந்த புத்தகம் வழங்கப்படும். தேர்வு எழுத மட்டுமில்லாமல் உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் இந்த புத்தகம் உதவும். நம் பிரதமர் வித்தியாசமான மனிதர். கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். சாதாரண மக்களுடன் கிராமங்களில் வாழ்ந்து அனைத்து விதமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். பாதுகாப்பாக வளர்ந்து வரவில்லை.
இந்தியா யாரால் ஆளப்படுகிறது? என்னாலோ, என்னை போல் பதவியில் இருப்பவர்களாலோ இல்லை. உங்களை போன்ற மாணவர்கள், இளைஞர்களால் தான். நீங்கள் பாறை போன்றவர்கள். உங்களது திறமையை வெளிக்காட்டுவதன்மூலம் தான் அழகான சிற்பமாக மாறுவீர்கள். வெளியில் இருந்து பார்த்தால் கரடுமுரடாக தான் இருக்கும். ஒருமுறை அது வெளிப்பட்டால்தான், அதன் மதிப்பு தெரியும்.
ஒரு இளம் ஆண் அல்லது பெண், வாழ்வில் முன்னேறாமல் இருப்பது, அவர்களின் இழப்பு
மட்டுமல்ல நாட்டின் இழப்பு. நீங்கள் உங்களின் தகுதியை உணர்ந்து வளர்ந்து வரவில்லை என்றால் அது உங்களுக்கும் இழப்பு. உங்கள் பெற்றோருக்கும் இழப்பு. இந்த நாட்டுக்கும் இழப்பு. தேர்வு மட்டும் இறுதி இல்லை. தேர்வு பயத்தில் பதற்றம், மன அழுத்தம் காரணமாக
உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, தற்கொலைக்கு முயல்கிறார்கள். அது மிகவும் கொடுமையானது.
என் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் நான் கூறுவது என்னவென்றால், நீங்கள் தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள். அது கடினமாக இருந்தால், அதிகம் புன்னகை செய்யுங்கள். இது என்னுடைய யுபிஎஸ்சி(UPSC) தேர்வில் எனக்கு உதவியது. உங்களை நீங்கள் நம்புங்கள். பெற்றோர்கள் மாணவர்கள் படிப்பில் முக்கிய பங்காற்றுகின்றனர். இன்னொரு குழந்தை 99% எடுத்துள்ளது. நம் குழந்தை 97% எடுத்துள்ளார்கள் என வருத்தப்படுகிறார்கள். ஆலமர விதை சிறியதுதான். ஆனால் அதுதான் பெரிய விருட்சமாக வளரும். அதுபோல், நீங்களும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு வளர வேண்டும்” என்று பேசினார்.