தமிழ்நாட்டில் SIR | பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய் வாய் திறப்பாரா..?- எம்பி ரவிக்குமார் கேள்வி…!

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் பாஜகவைத் தனது கொள்கை எதிரி எனக் கூறும் விஜய் இது குறித்து வாய் திறப்பாரா? என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில்  மறைவு, இடம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக சுமார்  65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையாக  எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ”பீகாரை தொடர்ந்து  இரண்டாம் கட்டமாக 12  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளது. அதன்படி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம்,  மேற்கு வங்காளம், கோவா, சத்தீஸ்கர், குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆகிய மாநிலங்களிலும்  அந்தமான், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன”  என்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் விழுப்புரம் மக்களவை எம்பி ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழ்நாட்டின்மீது அக்கறையுள்ள கட்சிகள் எதிர்க்கின்றன. இது தேர்தல் ஆணையத்தின் துணையோடு பாஜக மேற்கொள்ளும் வாக்குத் திருட்டு எனக் குற்றம் சாட்டுகின்றன.

பாஜகவைத் தனது கொள்கை எதிரி எனக் கூறும் தவெக இதை எதிர்க்கிறதா? விஜய் அவர்கள் வாய் திறப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.