தமிழ்நாட்டிலும் SIR | வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!

தமிழ்நாட்டிலும் SIR மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசானை நடத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம் என பதிவிட்டுள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில்  மறைவு, இடம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக சுமார்  65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையாக  எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ”பீகாரை தொடர்ந்து  இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்  மேற்கொள்ளப்படவுள்ளன”  என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  திமுக கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வைகோ, வேல்முருகன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில்,  ”தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் – பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம்.

அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும். மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.