சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் ஜான் ஜெபராஜ் உறவினர் கைது!

மதபோதகர் ஜான் ஜெபராஜ் உறவினரை கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (வயது 35). கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வரும் ஜான் ஜெபராஜ் மத போதகராகவும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வந்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஜான் ஜெபராஜ் மீது அந்த சிறுமிகள் காந்திபுரம் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஆனால் தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜை கைது செய்யப்பட்டார்.

இதனிடையே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜான் ஜெபராஜ் உறவினரான, கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த பெனட் ஹரீஸ் (32) என்பவரை கோவை மாநகர மத்திய அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்த சிறுமிகள் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.