தாயை அவதூறாக பேசிய தம்பி கொலை – அண்ணன் வெறிச்செயல் … மதுரையில் பரபரப்பு!

மேலூர் அருகே தாயை அவதூறாக பேசிய தம்பியை கொலை செய்த அண்ணன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வினோபா காலனி பகுதியைச் சேர்ந்த பாண்டி – புனிதா தம்பதியர்களுக்கு நாண்கு மகன்கள் உள்ளனர். இதில் கடைசி மகனான அரவிந்த் மதுபோதையில் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது 16 வழக்குகள் மேலூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் தனது தாய் குறித்து அவதூறாக பேசி வீட்டில் சண்டையிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது அண்ணன் ராஜா என்பவர் இரும்பு கம்பியால் அரவிந்தை தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அரவிந்த் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த மேலூர் போலீசார் அரவிந்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து ராஜா மேலூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இது குறித்த விசாரணையில், போதையில் தனது தாயை அவதூறாக பேசியதாகவும் தினந்தோறும் வீட்டில் சண்டைபோட்டு வந்ததால் ஆத்திரத்தில் தனது தம்பியை கொலை செய்ததாக ராஜா வாக்குமூலம் அளித்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.