விரைவில் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடுதலையான சசிகலா, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வந்த சசிகலா, ஒரு கட்டத்தில் முழு நேர அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரிலேயே அறிக்கைகள் வெளியிட்டு வருவதோடு, அதிமுக கொடி கட்டிய காரில்தான் பயணிக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு கோயிலாக சென்று வழிபட்டு வரும் சசிகலா, அப்பகுதியிலுள்ள தொண்டர்களையும் சந்திக்கிறார். இந்த நிலையில் திருக்கடையூர் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி சென்றார் சசிகலா.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அரசியல் பயணத்தை எப்போது தொடங்க போகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன் என பதிலளித்தார் சசிகலா. பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிச்சயம் விரைவில் மேல்முறையீடு செய்வேன் எனவும் பதிலளித்தார்.
இதுபோலவே திருச்சியில் பேட்டியளித்த சசிகலாவிடம் அரசியல் பயணம் தனியாகவா அல்லது கூட்டணி கட்சியுடனா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார்.