தொலைபேசி மூலம் சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து, அக்கட்சி தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருவது வழக்கம். இதற்கிடையே சமீப நாட்களாக, அவர்கள் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து, தனித்தனியே அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களை சந்தித்து, ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்கள் மட்டும் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர்களை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியது, அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, சசிகலா தற்போது அதிமுகவில் இல்லை எனவும் அமமுக நிர்வாகிகளுடன் தான் அவர் தொலைபேசியில் பேசியதாகவும் கூறினார்.
சசிகலா பேசியதை வைத்து அதிமுக-வில் குழப்பம் ஏற்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார். அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.







