டெல்லியில் விவசாயிகளின் செங்கோட்டை முற்றுகைப் போராட்டம் இரவிலும் நீடித்தது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், குடியரசுத் தினமான நேற்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி கேட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய அரசின் சார்பில், ராஜபாதையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் முடிந்த உடன் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், டெல்லி குடியரசு தினவிழா முடிவடைவதற்கு முன்பாகவே விவசாயிகள், டெல்லி எல்லைக்குள் பெரும் திரளாக நுழைய முயன்றனர்.
சிங்கு எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால், போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். அப்போது, விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இருப்பினும், கலைந்து செல்லாமல் தொடர்ந்து முன்னேறிவந்த விவசாயிகள் மீது குதிரைப்படை போலீசார் தடியடி நடத்தினர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளை, மத்திய டெல்லியின் ஐடிஓ பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. போலீசார் மீது சிலர் கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் மத்திய டெல்லி பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதையடுத்து டெல்லி செங்கோட்டைக்குள் விவசாயிகள் நுழைந்ததால் போலீசார் திகைத்து போயினர். விவசாயிகள் செங்கோட்டை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டை கொடிக்கம்பத்தின் மீது ஏறி, விவசாயிகள் கொடியை ஏற்றியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
விவசாயிகளின் செங்கோட்டை முற்றுகைப் போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. செங்கோட்டை முன்பு டிராக்டர்களுடன் விவசாயிகள் திரண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
டெல்லி ஐடிஓ பகுதியில் விவசாயி ஒருவர் ஓட்டி வந்த டிராக்டர், சாலையில் போலீசார் வைத்திருந்த தடுப்பின் மீது மோதி, தலைகீழாக கவிழ்ந்தது. இதில் அந்த விவசாயி உயிரிழந்தார். இதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.