இந்தியா முழுவதும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்தும் புத்தாண்டைக் கொண்டாடினர். புத்தாண்டையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: இந்த புத்தாண்டு புதிய சக்தி மற்றும் நேர்மறையான மாற்றத்தின் அடையாளமாக இருக்கட்டும். சுயபரிசீலனை மற்றும் புதிய தீர்மானங்கள் எடுக்கவும் இது நல்ல வாய்ப்பு. இந்நாளில், நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துவோம். 2026 புத்தாண்டு நமது வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பைக் கொண்டு வந்து, வலுவான மற்றும் செழிப்பான இந்தியாவை உருவாக்க புதிய சக்தியை அளிக்கட்டும்.
பிரதமர் மோடி : அனைவருக்கும் ஒரு அற்புதமான 2026 ஆம் ஆண்டு அமைய வாழ்த்துகிறேன். வரவிருக்கும் இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் நிறைவும் கிடைக்கட்டும். நமது சமூகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவப் பிரார்த்திக்கிறோம்.
ராகுல் காந்தி : உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2026 நல்வாழ்த்துக்கள்!
ஆளுநர் ஆர்.என்.ரவி: 2026 விடியல், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் வலுப்படுத்தப்பட்ட உறுதியை அறிமுகப்படுத்தட்டும். நம் வாழ்வில் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பை நிரப்பட்டும். நிலையான மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க ஒன்றாக முன்னேறுவோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தமிழகத்துக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்த 2025-க்கு விடைகொடுத்து, மாபெரும் வெற்றியை வழங்கவுள்ள 2026-ல் அடியெடுத்து வைக்கத் தயாராகிறோம். 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் நம் கனவு இந்த ஆண்டில் வலுப்படும். தமிழகம் யாருக்கும் தலைகுனியாது, தொடர்ந்து போராடும். இதுவரை பெற்ற வெற்றிகள் தந்த ஊக்கத்துடன் 2026-ல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம். அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வெற்றிகளும் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக புத்தாண்டு அமைய அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: ஆங்கிலப் புத்தாண்டு தமிழக மக்களுக்கு நிறைவான மகிழ்ச்சியையும், தித்திக்கும் நிகழ்வுகளையும், நிறைந்த செல்வத்தையும், நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும்.
தவெக தலைவர் விஜய் : தமிழக அரசியலின் நேர்மைமிகு நம்பிக்கை ஒளியாய், நாளைய தலைமுறைகளின் தலைசிறந்த வழியாய் நாமே மாறுவோம். புதிதாகப் பிறக்கும் இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம். வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது. வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது. வெற்றிச் சரித்திரம் படைக்கப் போகும் உறுதியை மனதிலும் செயலிலும் ஏற்று இப்புத்தாண்டை வரவேற்போம். அனைவருக்கும் ஒளிமிக்க ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
இதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்,உள்ளிட்டோரும் புத்தாண்டு வாழ்த்து களைத் தெரிவித்துள்ளனர்.







